Pages

Saturday, November 21, 2015

குழந்தை பராமரிப்புக்காக மனைவி இல்லாத ஆண் ஊழியர்களுக்கும் 2 ஆண்டு விடுமுறை: 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு


மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க அமைக்கப்பட்ட 7-வது சம்பள கமிஷனின் அறிக்கை, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது.


அதில், மத்திய அரசின் ஆண் ஊழியர்களுக்கும் முதல்முறையாக குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க சிபாரிசு செய்யப்பட்டிருப்பது நேற்று தெரியவந்தது.

கடந்த 6-வது சம்பள கமிஷன்தான், பெண் ஊழியர்களுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் (730 நாட்கள்) குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க முதல்முறையாக சிபாரிசு செய்தது. அது அப்படியே அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, பெண் ஊழியர்கள், 18 வயது வரையிலான தங்கள் மைனர் குழந்தைகளைப் பராமரிக்க தங்கள் ஒட்டுமொத்த பணிக்காலத்தில் 2 ஆண்டுகள்வரை விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

இந்நிலையில், 7-வது சம்பள கமிஷன், ஆண் ஊழியர்களுக்கும் முதல்முறையாக குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க சிபாரிசு செய்துள்ளது. மனைவி இல்லாதநிலையில், குழந்தைகளை பராமரித்து வரும் ஆண் ஊழியர்களுக்கு இந்த விடுமுறை அளிக்க சிபாரிசு செய்துள்ளது.

இதுகுறித்து 7-வது சம்பள கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசு ஆண் ஊழியர், மனைவி இல்லாமல் வாழ்பவராக இருந்தால், குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு, அவரது தோள் மீது விழுகிறது. ஆகவே, அவருக்கும் குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க சிபாரிசு செய்கிறோம்.

இதில், முதல் 365 நாட்கள், 100 சதவீத சம்பளத்துடன் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். மீதி 365 நாட்கள், 80 சதவீத சம்பளத்துடன் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். உண்மையிலேயே பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டும் பலன்அடையும் வகையில், இதில் ஏதேனும் அளவுகோலை அறிமுகப்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகளுக்கு முன்னணி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தொழிற்சங்கமான பாரதீய மஸ்தூர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விரேஷ் உபாத்யாயா கூறுகையில், ‘நிகர சம்பளத்தில் 16 சதவீத உயர்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இது ஏமாற்றம் அளிக்கிறது. அதிகபட்ச சம்பளத்துக்கும், குறைந்தபட்ச சம்பளத்துக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. மேலும், பணிக்கொடை உச்சவரம்பை உயர்த்தி இருப்பது உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே பயன்படும்‘ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ.கே.பத்மநாபன் கூறுகையில், ‘இவை தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. குறைந்தபட்ச சம்பளம், தற்போதைய விலைவாசிக்கு ஏற்றபடி இல்லை‘ என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பொதுச்செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா கூறுகையில், ‘கடந்த 30 ஆண்டுகளில் இதுதான் மிகக்குறைவான சம்பள உயர்வு. இது திருப்தி அளிக்கவில்லை. வீட்டு வாடகை படியை குறைத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது‘ என்றார்.

No comments:

Post a Comment