'வங்கிகளில், மாணவர்கள் பெறும் கல்விக் கடனில், 7.50 லட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் தேவையில்லை' என்ற, புதிய நடைமுறையை, மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது
தங்கள் பிள்ளைகளை, உயர் கல்வி படிக்க வைக்க வசதியில்லாத பெற்றோர், வங்கிகளில் கடன் பெற்று இன்ஜினியரிங், மருத்துவம் போன்ற படிப்புகளை படிக்க வைக்கின்றனர்.
இவ்வாறு கடனாக பெறும் தொகையை, அந்த மாணவர்கள் வேலைக்கு சென்ற பின் திருப்பி செலுத்தினால் போதும்.
பல நாடுகளிலும் இது போன்ற கல்விக்கடன் திட்டங்கள் உள்ளன. சமீப காலமாக, கல்விக்கான செலவு அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், கல்விக்கடனும் அதிகரித்து வருகிறது.
ஆனால், கடன் வழங்கும் வங்கிகள் ஏராளமான நிபந்தனைகளை விதித்து, மாணவர்களை கஷ்டத்திற்கு உள்ளாக்குகின்றன.
கடன் வழங்கும் வங்கிகள், 'வங்கிக் கடன் நடைமுறைகள் - 2012'ஐ பின்பற்றி, அதில் உள்ள அம்சங்களின் படி, கெடுபிடி நிபந்தனைகளை விதிக்கின்றன.இதனால், வங்கித்துறை மீது கண்டனங்கள் பாய்கின்றன.
இதை தவிர்க்க, இந்திய வங்கிகள் சங்கம், 'வங்கிக் கடன் நடைமுறைகள் - 2015' என்ற புதிய கொள்கைகளை உருவாக்கி உள்ளது.
அந்த அமைப்பு, இதற்கான பரிந்துரைகளை வங்கிகளுக்கு அனுப்பியுள்ளது.
இந்திய வங்கிகள் சங்கம் அளித்துள்ள பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள்:
* நான்கு லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் பெறுபவர்கள், எந்த உத்தரவாதமும் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலையை மாற்றி, 7.50 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்கள், உத்தரவாதம் அளிக்க தேவையில்லை என மாற்றப்பட்டுள்ளது
* எனினும், அந்த கடன் தொகைக்கு, 'கிரெடிட் கேரன்டி ஸ்கீம்' என்ற கடன் உத்தரவாத காப்பீடு செய்யப்படும்
* காப்பீடுக்கான பிரிமியம் தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டும்
* கல்விக்கடன் தொகை திருப்பி செலுத்தப்படாமல், 'வாராக்கடன்' என்ற நிலையை அடைந்தால், அதை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்று, வங்கிக்கு கடன் தொகையை அளிக்கும்
* எனவே, 7.50 லட்சம் ரூபாய் வரையிலான கல்விக்கடனுக்கு, உத்தரவாதம் அளிக்க தேவையில்லை.இவ்வாறு அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment