Pages

Thursday, September 24, 2015

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு கட்டடங்கள் கட்ட ரூ.1,263 கோடி: முதல்வர் அறிவிப்பு

உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 1,054 பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட ரூ.1,263 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.



 சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே 344, 710 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. தரம் உயர்த்தப்பட்ட 1,054 பள்ளிகளில் 896 பள்ளிகளுக்கு மட்டும் கட்டடம் கட்டுவதற்காக மத்திய அரசு 75:25 என்ற விகிதத்தில் ரூ.518 கோடி அளித்திருந்தது.
 மத்திய அரசால் ஒரு பள்ளி கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட தொகை, போதுமானதாக இல்லாததால், அப்பள்ளி கட்டடங்கள் இதுநாள் வரை கட்டப்படாமலேயே உள்ளன. எனவே, மாநில அரசின் பங்களிப்புத் தொகையான ரூ.129 கோடியை விட கூடுதலான தொகையாக ரூ.996 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
 அதேபோன்று, மத்திய அரசின் நிதியிலிருந்து விடுபட்ட 158 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்கும் ரூ.267 கோடி வழங்கப்படும்.
 எனவே, தரம் உயர்த்தப்பட்ட 1,054 பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட ரூ.1,263 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
 மாநிலக் கணக்காயர் பராமரிப்புக்கு மாற்றம்: ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கினை மாநில கணக்காயர் அலுவலகத்தில் பராமரிக்க வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
 இந்தக் கோரிக்கையை ஏற்று 31.03.2003-க்கு முன்னதாக பணி நியமனம் பெற்று, பணிபுரிபவர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகள் அரசுத் தகவல் தொகுப்பு மையத்திலிருந்து, நடப்புக் கல்வியாண்டு முதல் மாநிலக் கணக்காயர் பராமரிப்பின் கீழ் கொண்டுவரப்படும். இதன்மூலம் 1 லட்சத்து 19 ஆயிரம் ஆசிரியர்கள் பயனடைவர்.
 கணினிமயம்: மாணவ, மாணவியருக்கான விலையில்லாப் பொருள்களை பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு, சென்னை, வேலூர், பர்கூர், தஞ்சாவூர், சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் கிடங்குகள் ரூ.30 கோடியில் கணினிமயமாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

No comments:

Post a Comment