Pages

Saturday, April 9, 2016

பள்ளி ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் பயிற்சி: கல்வித் தரத்தை உயர்த்த டெல்லி அரசு அதிரடி


அரசுப் பள்ளிகளில் ஆசியர்களாக பணியாற்றுபவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி சிறப்பு பயிற்சி அளிக்க ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு தீர்மானித்துள்ளது.

இந்தியாவிலும் வெளிநாடுகளுக்கு நிகரான கல்வித்தரத்தை கொண்டுவர வேண்டும் என இங்குள்ள பல மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன. இதில் ஒருகட்டமாக, டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி அங்குள்ள பிரபல ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்க ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு டெல்லி துணை முதல் மந்திரியும் கல்வித்துறை மந்திரியுமான மணிஷ் சிசோடியா ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:-
பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு எப்படி கற்பிப்பது?, என்ன கற்பிப்பது? என்பது தொடர்பான இருஅம்ச செயல்திட்டத்தை டெல்லி அரசின் கல்வித்துறை உருவாக்கியுள்ளது.
இதன்படி, உலகளாவிய அளவில் உள்ள கற்பித்தல் முறையை நாமும் கடைபிடிக்க வேண்டியுள்ளது. ஆனால், அவற்றை கண்மூடித்தனமாக நாமும் அப்படியே ‘காப்பி அடித்தால்’ அனைத்துமே வீணாகிவிடும். எனவே, கற்பித்தல் கலை தொடர்பான பல்வேறு அனுபவங்களையும், நவீன தொழில்நுட்பங்களையும் நாம் பின்பற்ற வேண்டியுள்ளது,
இவற்றில் நமக்கு தேவையான நுணுக்கங்களை அறிந்துகொள்ளும் வகையில் சிங்கப்பூருக்குச் சென்று, அங்குள்ள தேசிய கல்வியல் பயிற்சியகத்தில் சில பயிற்சிகளை மேற்கொள்ள நீங்கள் தயாராக வேண்டும். இதேபோல், ஜெர்மனி மற்றும் பின்லாந்தில் உள்ள சில சர்வதேச பள்ளிகளுக்கும் நீங்கள் பயிற்சிக்காக செல்ல அரசு ஏற்பாடு செய்யும்.
மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பயிற்சிக்காக இங்கிலாந்தில் உள்ள பிரபல கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கவும் முடிவு செய்துள்ள டெல்லி அரசு, இவ்விரு திட்டங்களுக்காகவும் நடப்பு நிதியாண்டில் 102 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment