Pages

Saturday, April 23, 2016

மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் அப்பிளிகேசன் !!!


திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி கணினித்துறை மாணவர்கள் மாதிரி ஆப்பரேஷன் மென்பொருள் கண்டுபிடித்துள்ளனர்.
மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க இறந்தவர்களின் உடல்களை உரிமையாளர்களின் அனுமதியுடன் பெற்று அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் உடற் பாகங்கள்
குறித்து பாடம் நடத்துவர். இறந்தவர் உடலை பயன்படுத்தி நேரடியாக அறுவை சிகிச்சை பயிற்சி அளிக்கும் முறை இந்தியாவில் மட்டுமே அதிகளவில் உள்ளது.வெளிநாடுகளில், அதற்கென பிரத்யேக வீடியோக்கள், நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மென்பொருள் மூலம் அறுவை சிகிச்சையை வீட்டில் இருந்தபடியே செய்து கற்றுக் கொள்கின்றனர்.


இந்தியாவில் உள்ளது போல இறந்தவரின் உடலை வைத்து, மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அறுவை சிகிச்சை செய்து பயிற்சி பெறுவது என்பது கடினமானது. ஆகவே, இதனை கருத்தில் கொண்டு மருத்துவ மாணவர்கள் பயன்படும் வகையில், கணினித்துறை மாணவர்கள் முகமது நியாமத்துல்லா, கவின் சிதம்பரம், ராமச்சந்திரன் மாடல் ஆப்பரேஷன் மென்பொருளை துறை தலைவர் சாந்தி, பேராசிரியர் ஹேமலதா உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: இந்த மென்பொருள் மூலம் மருத்துவ மாணவர்கள், நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வது மாதிரியான பிம்பம் கணினியில் தோன்றும். இது இயல்பாக செய்வது போல தோன்றுவதற்காக, மென்பொருளுடன் &'கூகுள் போர்டு டேட்டா&' இணைக்கப் படுகிறது.

இதனை முகத்தில் மாட்டிக் கொண்டு, அதன் வழியே பார்க்கும் போது, உண்மையான ஆப்பரேஷன் தியேட்டரில் இருப்பது போல தெரியும். அதில், நோயாளி கட்டிலில் படுத்திருப்பது, மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய தயாராக நிற்பதுபோல தோன்றும்.

முகமூடி அணிந்த மாணவர்கள், தங்கள் கையை அசைத்து, ஆப்பரேஷனுக்கு தேவையான கத்தி, ஊசி போன்ற பொருட்களை கொண்டு அறுவை சிகிச்சை செய்வது, தையல் போடுவது என செயல்பட முடியும்.

இந்த மென்பொருள் மூலம் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரடியாக அறுவை சிகிச்சை செய்வது போல செய்து பழகலாம். இது அவர்களின் பயிற்சிக்கு பேருதவியாக இருக்கும், என்றனர்.

No comments:

Post a Comment