Pages

Saturday, April 16, 2016

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும்.



ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும்.தொடக்கக்கல்வித் துறைக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
வேண்டுகோள்.

 தமிழகத்தில் தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும்
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டத் தலைநகரில் மே
மாதம் கோடை விடுமுறையில் நடத்துவது வழக்கம். ஆனால் இந்தாண்டு; பொது
மாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பத்தை கூட சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம்
இருந்து பெறாமல் கல்வித்துறை காலம் தாழ்த்தி வருகிறது.


இது ஆசிரியர்களை
அச்சமடைய செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி மாநிலத் துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டத் தலைவர் தாமஸ்
அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர்
குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் கூட்டாக
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும்
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு வெளிப்படையான பொது
மாறுதல் கலந்தாய்வை ஒவ்வொரு மே மாத விடுமுறையிலும் நடத்துவது வழக்கம்.
கலந்தாய்வில் பங்கு பெற விரும்பும் ஆசிரியர்களிடம் ஏப்ரல் மாத
இறுதிக்குள் மாறுதல் விண்ணப்பம் உதவித் தொடக்கக்கல்வி அலவலகத்தால்
பெறப்பட்டு மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரால் பணியிட மூப்பின் அடிப்படையில் ஒன்றியம்
வாரியாக ஆசிரியர் பட்டியலும் காலிப் பணியிட விபரமும் வெளியிடப்படும்.
இதில் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட காலி பணியிடங்களை பணியிட
மூப்பின் அடிப்படையில் வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் பெற்றுக்கொள்வர்.
மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் வருகிற கல்வி ஆண்டின் முதல் நாளில் அதாவது
ஜூன் முதல் நாளில் தாங்கள் மாறுதல் பெற்ற பள்ளியில் புதிதாக பணியேற்றுக்
கொள்வார்கள். இதனால் மாணவர்கள் நலன் பாதிக்கப்படாமல் காக்கப்பட்டது.
ஆசிரியர்களும் தங்கள் குடும்பங்களை எளிதாக புதிய இடத்திற்கு இடம்பெயர்வு
செய்வதற்கு வசதியாகவும் இருந்தது.

 கடந்தாண்டு சரியான திட்டமிடல் இல்லாததால் பள்ளி திறந்த பின்பு
மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதனால் ஆசிரியர்கள் புதிய இடங்களில்
பணியேற்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். அக்கலந்தாய்விலும்
அரசாணைகளையும், செயல் முறைகளையும் புறந்தள்ளிவிட்டு  அரசியல்வாதிகள்
மற்றும் அதிகாரிகளின் தலையீட்டால் பல்வேறு காலிப் பணியிடங்கள்
மறைக்கப்பட்டதால் நியாயமாக கலந்தாய்வில் பங்கேற்ற மூத்த ஆசிரியர்கள் உரிய
பணியிடங்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இதனால்  ஆசிரியர்
இயக்ககங்களில் கடுமையான எதிர்ப்பை கல்வித்துறை எதிர் நோக்க
வேண்டியிருந்தது.
                        ஆனால் இந்தாண்டு இதுவரை மாறுதல் விண்ணப்பம் அளிப்பதற்கு எவ்வித
அறிவிப்பும் கல்வி துறையால் வெளியிடப்படவில்லை. பள்ளி நிறைவடைவதற்கு
இன்னும் ஓரு சில நாட்களே உள்ள நிலையில் கல்வி துறை மௌனம் சாதிப்பது
என்பது வெளி மாவட்டம் மற்றும் மற்ற ஒன்றியங்களுக்கு மாறுதல் கோரி பல
ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி அதிகாரிகளும் மேலிட தகவல்கள் இல்லாமல் இது குறித்து கருத்து கூற
மறுக்கின்றனர். எனவே கல்வித்துறை வருகிற சட்டமன்றத் தேர்தலை காரணம்
காட்டாமல் உடனடியாக தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதியுடன் ஆசிரியர்களிடம்
விருப்ப மனுவை பெற்று காலிப்பணியிடங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

மே மாத விடுமுறையிலேயே பொது மாறுதல் கலந்தாய்வை நடத்துவதுடன்
தகுதியானவர்களுக்கு பதவி உயர்வையும் அளித்திட வேண்டும் என எங்கள்
அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment