Pages

Monday, February 22, 2016

மத்திய அரசு கல்விக்கூடங்களில் 3-வது மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வரக்கூடாது; கருணாநிதி வலியுறுத்தல்


மத்திய அரசு கல்விக்கூடங்களில் 3-வது மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வரக்கூடாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமஸ்கிருதம்
பா.ஜ.க. அரசு 2014-ம் ஆண்டில் அமைந்ததற்கு பிறகு, அடிப்படை வாதமான இந்துத்வாவின் அடையாளமாகிய சமஸ்கிருத மொழியை திணிப்பதில் வேண்டுமென்றே பிடிவாதமாக இருக்கிறது. மத்திய மந்திரிகளில் ஒரு சிலரும், அவர்களுக்குத் துணையாக சில அதிகாரிகளும் இணைந்து சமஸ்கிருத மொழித்திணிப்பை இதுவரை மறைமுக நோக்கமாகக் கொண்டிருந்தவர்கள், தற்போது முகமூடியைக் கழற்றி விட்டு வெளிப்படையாகவே அத்தகைய முயற்சிகளில் வேகமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த முயற்சிகளில் ஒன்றாக, இந்தியா முழுவதும் மத்திய அரசின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. போன்ற கல்விக்கூடங்களில் வரும் கல்வியாண்டு முதல் (2016-2017), சமஸ்கிருதம் மூன்றாம் மொழிப்பாடமாக கற்பிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தலைமையில் நடைபெற்ற கல்வி ஆலோசனைக்குழு கூட்டத்தில், வரும் கல்வி ஆண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதித்திருக்கிறார்கள். அப்போது மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறும்போது, ‘‘ஆங்கில மொழி மற்றும் மாநில மொழிகள் (தாய்மொழி) மாணவர்களுக்குத் தேவையாக இருப்பினும் நமது பரந்துபட்ட கலாசாரத்தை கற்பிக்கும் வகையில் சமஸ்கிருதம் முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டும்.
3-வது மொழி பாடமாக...
தற்போது மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இருமொழி பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 3-வது மொழிப்பாடமாக சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளோம். ஆகவே வரும் கல்வியாண்டு முதல் (2016-2017) மத்திய அரசின் கீழ் வரும் அனைத்துக்கல்வி நிலையங்களிலும் கட்டாய பாடமாக சமஸ்கிருதம் முன்னிலைப்படுத்தப்படும். மேலும் வரும் ஆண்டுகளில் 8-ம் வகுப்புக்கு மேல் 12-ம் வகுப்பு வரை சமஸ்கிருத கல்வியைக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
மத்திய மந்திரியின் இந்த அறிவிப்பிலிருந்து, முதலில் வடமொழித்திணிப்பு, அடுத்து கலாசாரத் திணிப்பு தொடர்ந்து இந்தியாவில் அரங்கேற உள்ளன என்ற அச்சுறுத்தலை அறிந்து கொள்ளலாம். உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவு குறித்து ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பேட்டியளித்த போது இதே கருத்தினைத் திரும்பவும் கூறியதோடு, மாணவர்களுக்கு தேவையான அனைத்து சமஸ்கிருத மொழி நூல்களும் விரைவில் அச்சிடப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படவுள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
பிரதமர் தலையிட வேண்டும்
இது போன்ற முக்கியமான முடிவுகளை பிரதமரிடமும், மத்திய மந்திரி சபையிடமும் விரிவாக விவாதித்து ஒப்புதல் பெற்று அதன் பின்னர் எடுக்காமல், அமைச்சர்கள் அளவில் மட்டும் எடுப்பது மிகப் பெரிய எதிர்ப்பினையும், நெருக்கடியையும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஏற்படுத்தும் என்பதால், பிரதமர் உடனடியாகத் தலையிட்டு வரும் கல்வியாண்டிலிருந்து மூன்றாவது மொழியாக இந்தியாவில் ஒரு சில ஆயிரம் பேர் மட்டுமே அறிந்திருப்பதும், வழக்கிழந்ததுமான சமஸ்கிருதத்தைக்கொண்டு வருவதைத் தவிர்த்து; இந்தியத் திருநாட்டின் பன்முகத் தன்மையினையும், பல கோடி மக்களிடையே உயிரோட்டத்துடன் இருந்து வரும் பல்வேறு மொழிகளையும் அவற்றிற்கான உரிமைகளையும் பாதுகாத்திட வேண்டுமென்று தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment