Pages

Friday, October 7, 2016

அடுத்த ஆண்டு 'நீட்' தேர்வு உண்டா? : அறிவிப்பு இல்லாததால் குழப்பம்

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, அடுத்த கல்வி ஆண்டில், 'நீட்' என்ற, தேசிய நுழைவுத்தேர்வு உண்டா என்பது குறித்து, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் தொடர்ந்த வழக்கில், அனைத்து மாநில மாணவர்களும்,

நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு, பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மத்திய அரசின் சார்பில், அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களில், நடப்பு கல்வி ஆண்டான, 2016 - 17க்கு மட்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், நீட் தேர்வுப்படியே மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பொதுத்தேர்வு முடித்ததும், நீட் இல்லாமல், அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, இந்திய மருத்துவ கவுன்சிலோ, இத்தேர்வை நடத்தும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நிர்வாகமோ, இதுவரை விளக்கம் அளிக்கவில்லை; அதனால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், மாணவர்களிடம் தனி கட்டணம் பெற்று, நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment