Pages

Friday, December 4, 2015

சென்னையில் டிசம்பர் 5 வரை அனைத்து ரெயில்களும் ரத்து


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. விமான போக்குவரத்து மற்றும் சென்னை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.


சென்னை எழும்பூரில் இருந்து தென் மாட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து செல்லும் ரெயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம்- திருத்தணிக்கு ரெயில்கள் பாதுகாப்பான முறையில் இயக்கப்பட்டு வருகிறது. எண்ணூர்-கும்மிடிபூண்டி மற்றும் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே ரெயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், மழை வெள்ளம் வடியாதால் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் சேவை வரும் 5-ம் தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்ததால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரெயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து அனைத்து ரெயில்களின் சேவையும் டிசம்பர் 5-ம் தேதி மதியம் 12 மணிவரையில் ரத்துசெய்யப்பட்டது என்று தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள், இவ்வழியாக செல்லும் சிறப்பு ரெயில்களின் சேவையும் டிசம்பர் 5-ம் தேதி மதியம் 12 மணிவரையில் ரத்து செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் மருத்து உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  மதுரை, திருச்சி ஆகிய ரெயில் நிலையங்கள் வரையிலும் மருத்துவ உதவிகள் விரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை ரெயில் நிலையங்களில் உள்ள மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை எழும்பூர், சென்ட்ரல், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வரையில் மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் பிற உதவிகளை செய்யும் வண்ணம் ரெயில்வே போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

No comments:

Post a Comment