Pages

Monday, December 21, 2015

தலைமை ஆசிரியரை தாக்கியதாக ஊராட்சித் தலைவர் மீது வழக்கு


ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் பள்ளிக் கட்டடம் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தலைமை ஆசிரியரைத் தாக்கியதாக ஊராட்சி மன்றத் தலைவர் மீது சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


 நெசல் கிராமத்தில் ஆரம்பப் பள்ளியும், நடுநிலைப் பள்ளியும் அருகருகே ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன. கடந்த 2011-ஆம் ஆண்டு நெசல் அரசு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, உயர்நிலைப் பள்ளிக்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு தற்போது அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின்கீழ், ரூ1.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


ஆனால் புதிய வகுப்பறைகள் கட்ட போதுமான இட வசதி இல்லாததால், அருகே உள்ள ஆரம்பப் பள்ளி கட்டடத்தின் மேல் அடுக்குகளில் கட்டடங்கள் கட்ட நெசல் கிராம  ஊராட்சி மன்றத் தலைவர் கஜேந்திரன் முடிவு செய்தாராம். அதற்காக பழைய கட்டடங்களை இடித்து விட்டு புதிய கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதனை அறிந்த ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் (45), கட்டடங்கள் நன்றாக உள்ளதால் அதனை இடிக்கக் கூடாது என்றும், வேறு இடத்தை தேர்வு செய்து அங்கே உயர் நிலைப் பள்ளி வகுப்பறைகளை கட்ட வேண்டும் என்றும் ஊராட்சி மன்றத் தலைவர் கஜேந்திரனிடம் வலியுறுத்தினாராம்.

 பின்னர், பள்ளி கல்விக்குழுக் கூட்டத்தில் துணைத் தலைவர் ராஜேஸ்வரியை வைத்து இங்கு கட்டடம் கட்டக் கூடாது என்று தலைமை ஆசிரியர் பாஸ்கர் தீர்மானம் நிறைவேற்றியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் கஜேந்திரன், வெள்ளிக்கிழமை மாலை உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு சென்று தலைமை ஆசிரியர் பாஸ்கரிடம் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரைத் தாக்கினாராம்.

 இதில் காயமடைந்த தலைமை ஆசிரியரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து ஆரணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, நெசல் ஊராட்சி மன்றத் தலைவரும் ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரிலும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment