Pages

Monday, December 14, 2015

யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்:

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) பிரதானத் தேர்வை இரு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தொடர் மழை, வெள்ளம் காரணமாக, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தடைபட்டன. பல்கலைக்கழகத் தேர்வுகளும், பள்ளித் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பாதிப்பானது இப்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமைதான் (டிச. 14) திறக்கப்படுகின்றன. 
இந்த நிலையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான பிரதானத் தேர்வு டிசம்பர் 18 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள தேர்வர்கள் சென்னையில் தங்கியே இந்தத் தேர்வுக்கு தங்களைத் தயார்படுத்துகின்றனர்.
நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த தேர்வர்கள் தடையின்றி தங்களைத் தயார்செய்து வரும் வேளையில், தமிழக மாணவர்கள் வெள்ளத்தால் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். இந்த இன்னல்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, தேர்வு நடத்தப்பட்டால அது தமிழக தேர்வர்களை மிகவும் பாதிக்கும். 
பெருவாரியான மக்களைப் பாதிக்கும் மிகப் பெரிய பேரழிவாக வெள்ள பாதிப்பு இருந்ததால், இந்தப் பிரதான தேர்வை குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். 
அப்போதுதான் தமிழக தேர்வர்கள் தங்களை முழுமையாகத் தயார்செய்துகொண்டு நாட்டின் பிற பகுதிகளின் தேர்வர்களோடு போட்டியிட முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment