Pages

Wednesday, December 9, 2015

இழந்த ஆவணங்களின் நகல்களைப் பெற டிச. 14 முதல் சிறப்பு முகாம்கள்


மழை-வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட குடும்ப அட்டை, கல்விச் சான்றுகளின் நகல்களைப் பெறுவதற்காக வரும் 14-ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து, முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
வெள்ளத்தின் காரணமாக, பொது மக்கள் தங்களது நிலம்-வீட்டு மனை
ப் பட்டா, கல்விச் சான்றிதழ், எரிவாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், நிலம்-வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இழந்துள்ளதாகத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த ஆவணங்களை மக்களுக்கு அவற்றின் நகல்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
எங்கெங்கு முகாம்கள்?:
நகல் ஆவணங்களை வழங்குவதற்காக, வருவாய் வட்டங்களிலும், கல்விச் சான்றிதழ்களுக்கு, பள்ளி-கல்லூரிகளிலும் வரும் 14-ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு சிறப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இந்த முகாம்களில் தமிழக அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும், மத்திய அரசின் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டு மக்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று ஒரு வாரத்துக்குள்ளாக நகல் ஆவணங்களை கட்டணம் இல்லாமல் வழங்குவர்.
சிறப்பு முகாம்களில் மட்டுமின்றி, பொது மக்கள் விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மூலமாகவும் கொடுத்து நகல் ஆவணங்களைப் பெறலாம். தமிழ்நாடு பத்திரப் பதிவுச் சட்டத்தின்படி, சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிலம்-வீட்டுமனை சொத்து தொடர்பான பத்திர நகல்கள் அனைத்தும் மூல ஆவணங்களாகக் கருதப்படும்.
ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் ஓட்டுநர் உரிமச் சான்று-வாகனப் பதிவுச் சான்று ஆகியவற்றை இழந்துள்ளனர். இந்த ஆவணங்களும் சிறப்பு முகாம்களின் மூலமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment