Pages

Saturday, October 17, 2015

பட்டப் படிப்பை அதிகபட்சம் 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டும்: நாடு முழுவதும் சீரான நடைமுறை

இளநிலை பட்டப் படிப்பை அதிகபட்சம் 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்ற வகையில், நாடு முழுவதும் சீரான வழிகாட்டுதலை பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக் கழகத் துணை வேந்தர்களுக்கும் பல்கலைக் கழக மானியக் குழு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

ஒரு பட்டப் படிப்பை முடிப்பதற்கான அதிகபட்ச காலஅவகாசம் நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் மாறுபட்டு இருப்பது கவனத்துக்கு வந்தது. இந்த அதிகபட்ச கால அவகாசத்தை நாடு முழுமைக்கும் சீராக்கும் வகையில், ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய வழிகாட்டுதலை பல்கலைக் கழக மானியக் குழு வகுத்துள்ளது.

அதன்படி, ஒரு மாணவர் இளநிலை பட்டப் படிப்பு அல்லது முதுநிலை பட்டப் படிப்பை அந்தப் பல்கலைக் கழகம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கால அவகாசத்தில் முடிக்க வேண்டும்.

அவ்வாறு குறைந்தபட்ச காலத்தில் முடிக்க முடியாதவர்களுக்கு மேலும் 2 ஆண்டுகளில் முடிக்க அனுமதி அளிக்கலாம். இதற்கு மேல், கால அவகாசம் அளிக்கப்படக் கூடாது.

இருந்தபோதும், தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளால் இந்தக் கூடுதல் கால அவகாசத்திலும் பட்டப் படிப்பை முடிக்க இயலாதவர்களுக்கு அவர்கள் தெரிவிக்கும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்பட்சத்தில் மேலும் ஒரு ஆண்டு கூடுதல் அவகாசம் அளிக்கலாம் என பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.


இதையடுத்து, மூன்று ஆண்டு இளநிலை பட்டப் படிப்பை, அதிகபட்சம் 5 ஆண்டுகளில் முடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment