Pages

Thursday, June 15, 2017

தனியார் பள்ளிக்கு சவால் விடும் அரசு பள்ளி: நவீன தொழிற்நுட்பத்தில் கற்பித்தல் பணி

 
சேலம் மாவட்டத்தில் இயங்கும் அரசு பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டம், கந்தம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இட பற்றாக்குறை காரணமாக, மாரியம்மன் கோவிலிலும், மரத்தடியிலும் பள்ளி நடந்து வந்தது.

தலைமையாசிரியர், ஆசிரியர்கள் முயற்சியால், இன்று, மூன்று மாடிகளுடன் தொடுதிரை பலகை, கணினி வழிக்கல்வி, 4டி அனிமேஷன் என, நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி, கற்பித்தலில் புதுமை படைத்து வருகிறது.

கடந்த, 1926ல், மிகச் சிறிய இடத்தில் துவங்கப்பட்ட இப்பள்ளி, 2004ல், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தனியார் பள்ளிகளின் மோகத்தால், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தது. இதை மாற்ற என்ன செய்யலாம் என, யோசித்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம், முக நுால் நண்பர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவி மூலம், பள்ளியை தரம் உயர்த்த முயற்சி எடுத்தனர்.

இதன்படி, மாணவ, மாணவியருக்கு தனித்தனியே நவீன கழிப்பறைகள், மாணவியருக்கு நாப்கின் எரியூட்டும் இயந்திரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆழ்துளை கிணறு, ஒவ்வொரு வகுப்பிலும், பாடம் தொடர்பான வண்ண ஓவியங்கள், அனைத்து மாணவர்களுக்கும் இருக்கை வசதி, யு.பி.எஸ்., வசதியுடன் கூடிய கணினி அறை.ஹோம் தியேட்டர், புரொஜக்டருடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ், தொடுதிரை பலகை, நவீன அறிவியல் ஆய்வகம், நுாலகம், மாடித்தோட்டம், 4டி அனிமேஷன் கல்வி, இங்கிலாந்தில் உள்ள ஆசிரியர்களுடன் இணையம் வழியே ஆங்கிலம் மற்றும் கணிதம் கற்பிக்கப்படுகிறது.

பள்ளி தலைமை ஆசிரியை சுபலஷ்மி கூறியதாவது:

உள்கட்டமைப்பு வசதிகளை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்தியதால், மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. ஆசிரியர்கள், வீடு வீடாக சென்று, உள்கட்டமைப்பு வசதி பற்றி தெரிவிக்கின்றனர். மாணவர்களின் திறனை கண்டு, சிறந்த அரசு பள்ளியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment