Pages

Monday, August 31, 2015

நாட்டு முன்னேற்றத்திற்கு காரணமான பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்: யுஜிசி தலைவர்

இன்றய கல்வி, ஒரு தனிப்பட்ட மாணவனின் முன்னேற்றத்திற்கு மட்டும் அல்லாது, நாட்டின் முன்னேற்றத்திற்கும் காரணமான பாடதிட்டங்கள் அமைய வேண்டும் என்று புதுதில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் எச்.தேவராஜ் கூறினார்.



விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. பதிவாளர் வெ.வாசுதேவன், முதல்வரின் தனிச் செயலாளர் முரளிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணை வேந்தர் ச.சரவணசங்கர் வரவேற்றார்.

பல்கலைக்கழக தேர்வு ஆணைய அதிகாரி பள்ளிகொண்டராஜசேகரன், பட்டம் பெறுவோரின் பட்டியலை டீன் அக்கடமி தேவராஜ் முன்னிலையில் வெளியிட்டார்.

பி.டெக்., பி.டெக் சிறப்புப் பிரிவு, எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆராய்ச்சியாளர்கள் என மொத்தம் 1677 பேருக்கு பட்டங்களை வழங்கி, பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் எச்.தேவராஜ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடம் உண்மை மற்றும் ஒற்றுமை நிலையை உருவாக்குவதற்கு அடிப்படையான நுண்ணறிவைக் கற்றுத்தர வேண்டும். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடையே சமத்துவத்தையும், சமுதாய நீதியையும் கற்பித்தாலும், நாட்டில் ஒற்றுமை குறைந்துள்ளது. பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற மக்களின் தேவையைக் குறிக்கோளாகக் கொண்டு பாடதிட்டங்களை மாற்றி, அதனுடைய தரத்தையும் உயர்த்தினால் ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்க முடியும்.

மாணவர்களை சிறந்தவர்களாக மாற்றுவது ஆசிரியர்கள்தான். நாட்டின் இன்றைய அவரசத் தேவை தியாகம் மிக்க ஆசிரியர்கள்.

மாணவர்கள் மூன்று கைகளை உடையவர்களாக திகழ வேண்டும். முதல் கை பெற்றோரைக் காப்பாற்றும் கை. இரண்டாவது நாட்டைக் காப்பாறும் வீரர்கள் போன்ற கை, மூன்றாவது எப்போதும் புத்தகம் படிக்கும் கை. இதனை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு நாளையும் புதிய முயற்சி, புதிய நம்பிக்கையுடன் தொடங்கி, தனித்தன்மையை வளர்த்து, தனித்திறமையுடன் முன் செல்ல வேண்டும் என்றார் அவர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பதிவாளர் வெ.வாசுதேவன், டீன் அகடாமிக் தேவராஜ் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தார்கள். நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment